இந்த புதிய வாரத்தின் துவக்கத்தில் உங்களுடன் இருப்பது நல்லது. வாழ்க்கை எனக்கு கற்றுத்தந்த உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன். அந்த உண்மைகள், என் வாழ்க்கையில் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அது உங்களுக்கும் அப்படியே செய்யும்.

முதலாவது, எனக்கு எழுதியவர்களுக்கு நன்றி சொல்லுகிறேன். நான் இந்தப் பேச்சை முடிப்பதற்கு முன், நீங்கள் எழுதக்கூடிய அஞ்சல் முகவரியை நாங்கள் உங்களுக்குத் தருகிறோம். உங்கள் தனிப்பட்ட தேவைகள், உங்கள் பிரச்சனைகள், உங்கள் ஜெப விண்ணப்பங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்காதீர்கள்.

கடந்த வாரம் முழுவதும் நான் பரிசுத்த ஆவியின் கனியின் பல்வேறு வடிவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன், இந்த வாரமும் அதே தலைப்பில் தொடரப் போகிறேன். கடந்த வாரம் நான் கையாண்ட கனியின் நான்கு வடிவங்கள்: அன்பு, சந்தோஷம், சமாதானம் மற்றும் நீடிய பொறுமை ஆகும். இன்று நான் ஆவியின் கனியின் அடுத்த வடிவமான தயவின் கனிப் பற்றி பேசப் போகிறேன்.

தயவின் முக்கியமான இயல்பு என்ன? இதை இவ்வாறு வரையறுக்கலாம் என்று நான் பரிந்துரைக்கிறேன் : தயவு என்பது நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே நாம் மற்றவர்களை நடத்துவதாகும். அதுவே தயவை நடைமுறையாக்குகிறது மற்றும் எளிதாக புரிந்துகொள்வதாகும், ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், பயன்படுத்துவதற்கு எளிதானதாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால், மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம் என்பது நமக்கு தெரியும். உண்மையில், நாம் அதைப் பற்றி நம் மனதில் தெளிவாக இருக்கிறோம்.

தயவு என்பது மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படியே நாமும் நடத்துகிறோம் என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம். லூக்கா 6:27-31 இல் இதைப் பற்றி இயேசு சிலவற்றைக் கூறுகிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்:

27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். 28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். 29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. 30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. 31 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

தயவுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன: நம் எதிரிகளை நேசிப்பது, நம்மை வெறுப்பவர்களுக்கு நன்மை செய்வது, நம்மை சபிப்பவர்களை ஆசீர்வதிப்பது, நம்மைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபிப்பது. யாராவது நமக்குச் சொந்தமான ஒன்றை எடுத்துச் செல்ல விரும்பினால், நாம் அதை தடுக்காமல் இருப்பது, நம்மிடம் கேட்பவர்களுக்கு கொடுப்பது போன்றவையாகும். நடத்தையின் வடிவங்களாக இயேசு குறிப்பிடும் பல்வேறு விஷயங்கள் உண்மையில் செயலில் தயவை உருவாக்குகின்றன என்று நான் நினைக்கிறேன். ஆனால், கடைசி வசனத்தில், அவர் அதைச் சுருக்கி, தயவின் திறவுகோலை நமக்குத் தருகிறார். அவர் சொல்கிறார், “மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படியே அவர்களை நடத்துங்கள்.

மலைப் பிரசங்கத்தில், மத்தேயு 7:12 இல், இயேசு இந்த கொள்கைக்கு திரும்புகிறார், அவர் இவ்வாறு கூறுகிறார்:

12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

இது ஒரு அற்புதமான அறிக்கை, இல்லையா? முழு பழைய ஏற்பாடும், நியாயப்பிரமாணமும் மற்றும் தீர்க்கதரிசனங்களும், ஒரு எளிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள். சில நேரங்களில் நாம் கட்டளைகள் மற்றும் பிரமாணங்களின் பிரமைகளில் தொலைந்து போகிறோம், அது எதைப் பற்றியது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். ஆனால், இங்கே புதிய ஏற்பாட்டில், மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவரை நடத்துங்கள் என்ற ஒரு எளிய அடிப்படைக் கொள்கையில் இயேசு அனைத்தையும் சுருக்கமாகக் கூறுகிறார்.

இப்போது இந்த இடத்தில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், அது எப்படியும் வேலை செய்யப் போகிறது. எனவே, நீங்கள் அதை முன்கூட்டியே அறிந்திருக்கலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் மற்றவர்களை நடத்தும் விதமாவது இறுதியில் உங்களிடம் திரும்பும். இதுதான் பிரபஞ்சத்தின் விதியாகும். இது விஞ்ஞானிகளால் அங்கீகரிக்கப்படாத ஒரு சட்டமாக இருக்கலாம், ஆனால் இது மனித நடத்தை மற்றும் மனித உறவுகளில் தேவன் கட்டமைத்த ஒரு சட்டமாகும். கலாத்தியர் 6:7 இல், பவுல் இதை சுருக்கமாகக் கூறுகிறார்:

7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார் [அல்லது “நீங்கள் தேவனை ஏமாற்ற முடியாது”]; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.

எனவே, நீங்கள் பார்க்கலாம், இந்த அம்சத்தில், உண்மையில், தயவு என்பது விழிப்புணர்வு பெற்ற சுயஆர்வமாகும். நீங்கள் எதைத் திரும்பப் பெற விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் கொடுக்கிறீர்கள். இருப்பினும், இது செயல்பட, கடந்த வாரம் நான் பேசிய ஆவியின் கனியின் முந்தைய வடிவத்துடன் தயவை இணைக்க வேண்டும்: நீடிய பொறுமை, தாங்கிக் கொள்ளும் ஒரு விருப்பம். நாம் எப்போதும் விரைவான முடிவுகளைத் தேடுவதில்லை. சில சமயங்களில், நாம் விதைத்தது நல்லதாக இருந்தாலும், தீயதாக இருந்தாலும், அறுவடை செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் நாம் எதை விதைக்கிறோமோ, அதையே திரும்பப் பெறப் போகிறோம் என்று வேதம் சொல்லுகிறது.

ஆனால், கலாத்தியர் 6:9 இல் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை பவுல் வலியுறுத்துகிறார். அவர் சொல்கிறார்:

9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

எனவே, விதைப்பதற்கும், அறுப்பதற்கும் இடையில் ஒரு இடைவெளி உள்ளது. மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களை நடத்துங்கள், அவர்கள் உடனடியாக அப்படி நடந்துகொள்வார்கள் என்று அர்த்தமல்ல. உண்மையில், இது மிகவும் எதிர்மாறாக தோன்றலாம். ஆனால், நீங்கள் தளர்ந்து போகாமல், தொடர்ந்து செய்தால், உரிய காலத்தில் நீங்கள் விதைத்ததை அறுவடை செய்வீர்கள் என்று பவுல் கூறுகிறார்.

வேதத்தில் குறிப்பாக இந்த கொள்கையை ஏழைகளுக்குப் பயன்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. பல நவீன கிறிஸ்தவர்கள் உணர்ந்ததை விட, ஏழைகளுக்கு உதவுவதைப் பற்றி வேதம் அதிகம் கூறுகிறது. உதாரணமாக, தி லிவிங் பைபிள் பதிப்பிலிருந்து நான் வாசிக்கிறேன் நீதிமொழிகள் 19:17 இல், அது கூறுகிறது:

17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறாரன்; அவன் கொடுத்ததை அவர் திரும்ப கொடுப்பார். [அவர் உங்கள் கடனுக்கு அற்புதமான வட்டியை செலுத்துகிறார்!]

அவர் கடனை நீண்ட காலம் வைத்திருக்கலாம், ஆனால் ஒரு நாள் நீங்கள் அதை வட்டியுடன் திரும்பப் பெறுவீர்கள். மேலும், தேவனின் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். எனவே, மீண்டும், அதே கொள்கைதான்: விட்டுகொடுங்கள், அன்பாக இருங்கள், மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அப்படியே நடத்துங்கள், மேலும், நீங்கள் கொடுத்துவிட்டு ஒன்றும் பெறவில்லை என்பது போல தோன்றினாலும், நீங்கள் உண்மையிலேயே தேவனுக்கு கடன் கொடுத்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள், மனிதர் உண்மையற்றவர்களாக இருந்தாலும் கூட, உங்களுக்கு திரும்பக் கொடுப்பதை கர்த்தர் பார்த்துக் கொள்வார்.

அதே கொள்கை, பிரசங்கி 11:1-2 இல், அழகான, உருவக மொழியில் மீண்டும் கூறப்பட்டுள்ளது.

1 உன் ஆகாரத்தை தண்ணீர்கள் மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். [தேவன் உங்களுக்கு எவ்வாறு வெகுமதி அளிக்கப் போகிறார் என்று காத்திருந்து பாருங்கள். பின்னர் அது கூறுகிறது:] 2 ஏழுபேருக்கும் எட்டுப்பேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.

ஏழு என்பது கடமையைக் குறிக்கும் எண்ணாகும். எட்டு என்றால் நீங்கள் கடமையைத் தாண்டி செல்கிறீர்கள் என்று நான் பரிந்துரைக்கிறேன். இது “இரண்டாம் மைல்” பற்றி இயேசு பேசியதைப் போன்றது. எனவே, சாலொமோன் கூறுகிறார், “உன் கடமையைச் செய். கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்து, அதற்குமேலே இன்னும் கொஞ்சம் கொடுங்கள்.” என்றார். ஏன்? ஏனென்றால், பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நாள் உங்களுக்கு உதவி தேவைப்படலாம். நீங்கள் அவநம்பிக்கையான சூழ்நிலையில் இருப்பவராக இருக்கலாம். நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்திருந்தால், அந்த நாள் வரும்போது, நீங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுவதை தேவன் பார்த்துக்கொள்வார்.

மற்றவர்கள் நம்மை எப்படி நடத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படி நடத்துவது பற்றி, நான் சொல்வது, நம் செயல்களுக்கு மட்டுமல்ல, நம் அணுகுமுறைக்கும் பொருந்தும். மத்தேயு 7:1-2 இல் இயேசு சொல்வதைக் கேளுங்கள்:

1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். [வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் தீர்ப்பளித்தால், அது உங்களை தீர்ப்பளிக்கும்போது திரும்பி வருகிறது.] 2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். [வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் மனிதர்களை பெருந்தன்மையுடன் நியாயந்தீர்ப்பது நல்லது, ஏனென்றால் எதிர்காலத்தில் சில சமயங்களில் அவர்கள் நம்மை பெருந்தன்மையுடன் நியாயந்தீர்க்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்]

மலைப் பிரசங்கத்தில், மீண்டும் மத்தேயு 5:7 இல், இயேசு கூறுகிறார்:

7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

நாம் தேவனிடமிருந்து இரக்கம் பெற விரும்பினால், நாம் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும்.

ஒரு கிறிஸ்தவனாக, என் வாழ்நாள் முழுவதும் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் நீடித்த ஒரு கொள்கை என்னுடனே சென்றது – எனக்கு தேவனின் இரக்கம் தேவை என்பதே. அதை நான் ஒருபோதும் அறியாமல் இருந்ததில்லை. எனக்கு தேவனின் கிருபை தேவை என்பதை நான் எப்போதும் அறிந்திருக்கிறேன். அந்த காரணத்திற்காக, தனிப்பட்ட முறையில், தேவனிடமிருந்து எனக்கு கிருபை தேவை என்று எனக்குத் தெரியும் என்பதால், மற்றவர்களிடமும் இரக்கத்தை நான் மறுக்கத் துணியவில்லை.

கலாத்தியர் 6:1 இல் அதே மாதிரியான அணுகுமுறையைப் பற்றி பவுல் பேசுகிறார், சில வகையான தவறுகளை செய்து, தாங்களாகவே பிரச்சனைகளில் சிக்கிக்கொண்ட சக விசுவாசிகளைக் கையாளும்போது, அவர் கூறுகிறார்:

1 சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு.

பாருங்கள், ஆவிக்குரியவை என்பது கடுமையான, சட்டபூர்வமான மற்றும் பிடிவாதமான ஒன்று அல்ல. ஆவிக்குரியவை என்பது பிறர் பிரச்சனையில் இருக்கும்போது அவர்களிடம் சாந்தமாக நடந்து கொள்வதாகும். மற்றவர்களிடம் நாம் கனிவாக இருக்க வேண்டிய காரணம்: அவர்களிடமுள்ள அதே பலவீனங்கள் நம்மிடமும் எளிதில் தோன்றுவதும் ஒரு காரணமாக இருக்கிறது.

என் கிறிஸ்தவ அனுபவத்தில், கிறிஸ்தவர்கள் பிரச்சனையில் சிக்கிய மற்றொரு விசுவாசியை கடுமையாகத் தீர்ப்பதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன். மேலும், கடுமையாகத் தீர்ப்பளித்தவர் அதே மாதிரியான சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கு வெகுகாலம் ஆகவில்லை. நீங்கள் பார்க்கலாம், இது ஒரு வகையான சட்டம். யாக்கோபு 2:13 இல் சொல்வதைக் கவனியுங்கள்:

13 ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மை பாராட்டும்.

நீங்கள் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதில் இரக்கம் காட்டவில்லை என்றால், நீங்களே, இரக்கமின்றி நியாயந்தீர்க்கப்படுவீர்கள். அந்த வசனம் தி லிவிங் பைபிளில் இன்னும் கொஞ்சம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது:

13 ஏனெனில் இரக்கம் காட்டாதவர்களுக்கு இரக்கம் கிடைக்காது. ஆனால், நீங்கள் இரக்கமுள்ளவராக இருந்தால், உங்கள் மீதான தேவனின் இரக்கம் உங்களுக்கு எதிரான அவருடைய தீர்ப்பை வெல்லும்.

எனவே, நீங்கள் தேவனால் நியாயந்தீர்க்கப்படலாம். உங்கள் வாழ்க்கையில் சில காரியங்களில் தேவன் உங்களை நியாயந்தீர்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. தேவன் நியாயத்தீர்ப்பின் தேவனாக இருக்கிறார், ஆனால், அவர் இரக்கத்தின் தேவனாகவும் இருக்கிறார். நீங்கள் பெறுவது தேவனின் இரக்கத்தையே தவிர அவருடைய நியாயத்தீர்ப்பு அல்ல என்பதை நீங்கள் எப்படி உறுதியாக நம்பலாம்? பிறரிடம் இரக்கம் காட்டுவதன் மூலமாக. நீங்கள் இரக்கமுள்ளவராக இருந்தால், உங்கள் மீதான தேவனின் இரக்கம் உங்களுக்கு எதிரான அவருடைய தீர்ப்பை வெல்லும்.

சரி, தயவு என்றால் என்ன என்பதை நான் சுருக்கமாகக் கூற விரும்புகிறேன். தயவு என்பது மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அப்படியே அவர்களை நடத்துவதாகும், அல்லது, அதை வேறு வழியில் சொல்லவேண்டுமானால், தயவு என்பது பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் சட்டங்களுடன், குறிப்பாக, நடத்தை மற்றும் உறவை நிர்வகிக்கும் சட்டங்களுடன் இணக்கமாக வாழ்வதாகும். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில், தயவு என்பது விழிப்புணர்வடைந்த சுயஆர்வமாகும்.

சரி, இன்றைக்கு நம் நேரம் முடிந்துவிட்டது. ஆனால், நாளை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுடன் வருவேன். நாளை நான் ஆவியின் கனியின் ஆறாவது வடிவமான நற்குணத்தின் கனியைப் பற்றி பேசப் போகிறேன்.

லைக்
பகிரவும்